Friday, June 28, 2013

சிதம்பர ரகசியம்


சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்ற இரு சொற்களின் கூட்டே சிதம்பரம் என்பதாகும். எனவே இந்த தலம் ஞானா காசம், சிற்றம்பலம், தில்லைவனம் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

ஆருத்ரா தரிசன நாளில் அவனே அவனே என்று கூறாமல், சிவனே சிவனே என்று கூறி வாழ்த்தி வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!

யாரெனும் ஒரு விசயத்தை முழுமையாக சொல்லாமால் மறைக்க முயன்றால்,அதில் அப்படியன்ன சிதமபர ரகசியம்?இருக்கிறது என்று கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது.அதை பற்றி விரிவாக பார்ப்போமா,
பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...