Friday, June 7, 2013

குரு பகவானின் அருட்பார்வை கிடைக்க



குரு பார்க்க கோடி நன்மை.என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.

வியாழ பகவான்

பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி. அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று போற்றப்படும் வியாழபகவான். இவர் தேவ குருவாக விளங்குபவர். குரு அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.

யோகம் தரும் பார்வை

இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான்.

சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.

கொண்டல்கடலை தானம்

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.

அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

வியாழ நோக்கம்

குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.

குரு பரிகார தலங்கள்

தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்களாக பல உள்ளன. இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம்.

நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். சூரசம்ஹாரம் செய்த பின்பு முருகப்பெருமான், அந்தத் தோஷத்தைப் போக்குவதற்காக திருச்செந்தூரில் சிவபெருமானைப் பூஜித்தார்.

நாள் தோறும் முருகப் பெருமான் பூஜித்தபின்பு, வியாழபகவான் இந்தத் தலத்திலே சிவபூஜை செய்கிறார். குருவருள் பெற திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். இவை தவிர சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்வதன் மூலமும் குருவின் அருளைப் பெறலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...