Tuesday, April 18, 2017

தாந்தியா தோபே

இது ஏதோ உண்ணும் உணவுப்பண்டம் என்றோ நெடுஞ்சாலை ஒர தாபாக்கள் எனப்படும் மோட்டல்கள் பெயரோ என எண்ண வேண்டாம்...
நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மாவீரன் தாந்தியா தோபே. இவன் ஒரு க்ஷத்திரியன் அல்ல. பிரம்மவர்த்தம் அரண்மனையில் கணக்கராக இருந்த ஒரு பிராமணனின் பிள்ளை. மகாபாரதத்தில் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனைப் போல இவனும் பிறப்பால் பிராமணன், வீரத்தால் க்ஷத்திரியன்.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். பிரம்மவர்த்தம் அரண்மனையில் தான் கடைசி பேஷ்வா பாஜிராவ் வாழ்ந்து வந்தார். தனக்கு மகன் இல்லை என்பதால் நாராயணபட் என்பவரின் மகனான நானாவை தத்து எடுத்துக்கொண்டார். அரண்மனையில் நானா இளவரசன் என்றால், இந்த தாந்தியா தோபே இளவரசனின் தோழன்.
பிரம்மவர்த்தம் அரண்மனையில் நானா, தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் ஆகியோர் இளமையில் வீர விளையாட்டுக்களைத் தான் விளையாடி வந்தனர். ஆயுத சாலையில் இருந்த ஆயுதங்களை எடுத்து இவர்கள் பயிற்சி பெற்றது, பின்னாளில் ஆங்கில கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிட பெருமளவில் உதவி செய்தது.
தாந்தியா தோபே அரண்மனையில் கணக்கெழுதும் குமாஸ்தாவாகத் தொடங்கினாலும், யுத்தக் கலையைப் பயின்று மாவீரனாகவும், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய அறிவாற்றல் பெற்றவனாகவும், ராஜதந்திரியாகவும் அவனால் திகழ முடிந்தது. நல்லோர் சேர்க்கை,  சூழ்நிலை ஆகியவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை தாந்தியாவின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாஜிராவ் தன் பரிவாரங்களுடன் ஆலோசனை நடத்தும் சமயம் அவர்கள் விவாதிக்கும் விஷயத்துக்கு நல்லதொரு தீர்வை தாந்தியா கொடுத்து சில சமயங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தர்க்க சாஸ்திரம் அந்த நாளில் நம் நாட்டில் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த தர்க்க சாஸ்திரத்தில் தாந்தியாவுக்கு இயற்கையிலேயே நல்ல பயிற்சி இருந்தது.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். சிப்பாய் கலகத்தை மத்திய இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயருக்கு மிகுந்த துன்பம் கொடுத்தவர்.
தாந்தியா தோபேயைப் பற்றி ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்கிறார்:   “புரட்சிப் படைக்குத் தலைமை தாங்குபவர் சாமான்யர் அல்ல. ஐரோப்பாவில் யுத்தக் களத்தில் தங்கள் திறமையைக் காட்டி போர் புரிந்த ஆங்கில தளபதிகளையெல்லாம் தாந்தியா எந்தவித பயமோ, தயக்கமோ இன்றி எதிர்த்து மோதியிருக்கிறார். திறமையான ஒரு தளபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பமும், தீரமும், செயல் திறனும் பெற்றிருந்தார் தாந்தியா தோபே. எதிரியின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.”
1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்த தாந்தியா தோபே தூக்கில் இடப்பட்ட நாள் தான் இந்த ஏப்ரல் 18.
அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.
1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...
தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.
தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து  மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார் ஈடு  இணையற்ற பாரத தாயின் வீர புதல்வன்..
அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.
இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள் ஏப்ரல் 18.
அந்த தூக்கு மரத்தில் அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது; பாரதம்  ஒரு வீரப் புதல்வனை இழந்தது. செய்தி கேட்டு தேசபக்தர்கள் எல்லோருமே கதறி அழுத காட்சியை இன்று நாம் மனக்கண்களால் தான் பார்க்க முடியும்.
வாழ்க தேசபக்தன் மாவீரன் தாந்தியா தோபேயின் புகழ்.!
மறக்கடிக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூர்வோம்....

Monday, April 17, 2017

108 நற்பண்புகள்


1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)
10.கருணை  (Mercy)
11.இரக்கம் (Compassion)
12.காரணம் அறிதல் (Consideration)
13.அக்கறையுடன்  (Mindfulness)
14.பெருந்தன்மை (Endurance)
15.பண்புடைமை (Piety)
16. அஹிம்சை  (Non violence)
17.துணையாக  (Subsidiarity)
18.சகிப்புத்தன்மை (Tolerance)
19. ஆர்வம் (Curiosity)
20. வளைந்து கொடுத்தல்  (Flexibility)
21.நகைச்சுவை (Humor)
22. படைப்பிக்கும் கலை  (Inventiveness)
23.வழிமுறை  (Logic)
24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)
25.காரணம்  (Reason)
26.தந்திரமாக  (Tactfulness)
27.புரிந்து கொள்ளுதல்  (Understanding)
28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )
29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
30.அறம் (Charity)
31.உதவுகின்ற  (Helpfulness)
32.தயாராக  இருப்பது  (Readiness)
33.ஞாபகம் வைத்தல்  (Remembrance)
34.தொண்டு செய்தல்  (Service)
35.ஞாபகசக்தி  (Tenacity)
36மன்னித்தல்  (Forgiveness)
37.வாக்குறுதி  (Commitment)
38.ஒத்துழைப்பு  (Cooperativeness)
39.சுதந்திரம்  (Freedom)
40.ஒருங்கிணைத்தல்  (Integrity)
41.பொறுப்பு (Responsibility)
42.ஒற்றுமை  (Unity)
43.தயாள குணம் (Generosity)
44.இனிமை  (Kindness)
45.பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)
46.சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
47.அருள் (Charisma)
48. தனித்திருத்தல்  (Detachment)
49.சுதந்திரமான நிலை (Independent)
50.தனிநபர் உரிமை (Individualism)
51.தூய்மை  (Purity)
52.உண்மையாக  (Sincerity)
53.ஸ்திரத்தன்மை  (Stability)
54.நல்ஒழுக்கம்  (Virtue ethics)
55.சமநிலை காத்தல் (Balance)
56.பாரபட்சமின்மை (Candor)
57.மனஉணர்வு (Conscientiousness)
58.உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
59.நியாயம் (Fairness)
60. நடுநிலையாக  (Impartiality)
61. நீதி (Justice)
62.  நன்னெறி  (Morality)
63.நேர்மை  (Honesty)
64.கவனமாக இருத்தல்(Attention)
65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
67.சீரிய யோசனை (Consideration)
68.பகுத்தரிதல்  (Discernment)
69. உள் உணர்வு  (Intuition)
70.சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
71.கண்காணிப்பு  (Vigilence)
72.அறிவுநுட்பம் (Wisdom)
73.லட்சியம்  (Ambition)
74.திடமான நோக்கம்  (Determination)
75.உழைப்பை நேசிப்பது  (Diligence)
76.நம்பிக்கையுடன்  (Faithfulness)
77.விடாமுயற்சி  (Persistence)
78.சாத்தியமாகின்ற  (Potential)
79.நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
80.உறுதி (Confidence)
81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
82.கண்ணியம்  (Diginity)
83.சாந்த குணம் (Gentleness)
84.அடக்கம்  (Moderation)
85.அமைதி (Peacefulness)
86.சாதுவான  (Meekness)
87.மீளும் தன்மை  (Resilience)
88.மௌனம் (Silence)
89.பொறுமை (Patience)
90.செழுமை  (Wealth)
91.சுய அதிகாரம் (Autonomy)
92.திருப்தி (Contentment)
93.மரியாதை (Honor)
94.மதிப்புமிக்க  (Respectfulness)
95.கட்டுப்படுத்துதல்  (Restraint)
96.பொது கட்டுப்பாடு  (Solidarity)
97.புலனடக்கம்  (Chasity)
98.தற்சார்பு  (Self Reliance)
99. சுயமரியாதை  (Self-Respect)
100.உருவாக்கும் கலை (Creativity)
101.சார்ந்திருத்தல்  (Dependability)
102.முன்னறிவு  (Foresight)
103.நற்குணம் (Goodness)
104.சந்தோஷம்  (Happiness)
105.ஞானம் (Knowledge)
106.நேர்மறை சிந்தனை  (Optimism)
107.முன்யோசனை  (Prudence)
108.விருந்தோம்பல் (Hospitality)

Monday, April 10, 2017

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?


காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து
ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.
1. சித்திரை மாஸம்
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது
2. வைகாசி மாஸம்
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.
3. ஆனி மாஸம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
4. ஆடி மாஸம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
5. ஆவணி மாஸம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
6. புரட்டாசி மாஸம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.
7. ஐப்பசி மாஸம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
8. கார்த்திகை மாஸம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
9. மார்கழி மாஸம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
10. தை மாஸம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
11. மாசி மாஸம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
12. பங்குனி மாஸம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.

அசுவமேத யாகம்

அசுவமேத யாகம் இருக்கும் யாகங்களிலேயே சிறந்த யாகம் என்று போற்றப்படுகின்றதுஇந்த யாகம் செய்வதற்கு, பெரிய தகுதிகள் இருக்க வேண்டும் என்பர்ஒரு ராஜ இதனை செய்தால், அவர் ” ராஜாக்களுக்கு ராஜன் – மஹாராஜர் – சக்கரவர்த்தி” ஆகிவிடுவார்பாண்டவர்கள் கௌரவர்களை பாரத யுதத்தில் வென்ற பிறகு இந்த யாகம் செய்து , யுதிஷ்டிரர் ” சக்கரவர்த்தி ” ஆக மகுடம் சூட்டிக் கொண்டார்ஒரு அலங்கரிக்கப்பட்ட குதிரை – ” அசுவம் ” யாகத்தின் செய்தியை தாங்கி, நாட்டிலுள்ள எல்லா இடத்திற்கும் அனுப்பி வைப்பர் – மற்ற எல்லா ராஜாக்களும் அந்த அமைதி செய்தியை ஏற்றுக் கொண்டு – அவரை – மஹாராஜாவாக ஏற்றுக் கொள்வர்இதன் மூலம் எல்லா சிற்றரசரசுகளும்இணைந்து ஒரு பெரிய தேசமாகும் – சிற்றரசரசர்களுக்கு பாதுகாப்பும் ஆகும்திமிங்கலம் , சிறிய மீனை விழுங்கி விடுவது போல், பெரிய தேசங்கள் , சிற்றரசுகளை வீழ்த்தி , தன்னோடு இணைத்துக் கொள்ளும்இந்த ஏற்பாட்டால் , சிற்றரசுகளுக்குபாதுகாப்பு கிடைக்கும் அதே சமயம் , இதனுள் மிகப் பெரிய உட்பொருள்பொதிந்திருக்கின்றதுஅசுவமேத யாகத்தின் உட்பொருள் :அசுவ (குதிரை ) = மூச்சுக் காற்று – அபான வாயு , மேத = சுழிமுனை நாடி. சுழிமுனை நாடி என்பது இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளுக்கு இடையில் ஒடும் நடு நாடியாகும்இந் நாடி சாமானியர்களுக்கு இயங்காமலும் , யோகிகளுக்கும் , விழிப்பு நிலையில் இருப்பவர்களுக்கும் . தன்னை உணர்ந்த சித்தர்களுக்கும் நன்கு இயங்கியபடியும் இருக்கும்அசுவமேத யாகம் என்பது – அபான வாயுவை சுழிமுனை நாடி வழியாக ஏற்றி , பிரமத்துவாரத்தைதிறப்பதாகும்இந்த செயற்கரிய செயலை, மாபெரும் சாதனை செய்வதன் மூலம் உடலை நம் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும்இதனை ஆற்றுவதன் மூலம் , இதுகாறும் மனதிடம் இருந்த உடலை இயக்கும் சக்தி மற்றும் கட்டுப்பாடு , ஆன்மாவிற்கு வந்துவிடும் என்பது திண்ணம் –மனம் ஆட்சி செய்தால் , முடிவில் கல்லறைக்கே போவார் – அறிவு ஆண்டால் முத்தேகச் சித்தி பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வு அடைவார்நம் சமகாலத்து அனேக மகரிஷிகளும், குருக்களும், இந்த பெரும் செயலை ஆற்ற முடியாது போய் , மண்ணுக்கு இரையாகிப் போனார் என்பது உண்மைஇந்த சூக்குமக் கலை மிகவும் இரகசியமாக வைத்துள்ளனர் நம் ரிஷிகளும் யோகியர்களும் – மேலும் இதனை தகுதி உள்ளவர்களுக்கு அவர்களாகவே வந்து கற்றுக்கொடுப்பர் என்று கூறப்படுகின்றது
1. புராணம் : அசுவம் உட்பொருள் : மூச்சு – அபான வாயு
2. புராணம் : மேதாஉட்பொருள் : சுழிமுனை நாடி – நடு நாடி
3. புராணம் : பாண்டவர்கள்உட்பொருள் : பஞ்ச இந்திரிய சக்திகளுடன் கூடிய ஆன்மா
4. புராணம் : தேசம்உட்பொருள் : தேகம் – உடல்
5. புராணம் : சிற்றசர்கள்உட்பொருள் : உடல் உறுப்புகள்
6. புராணம் : குதிரை நாடு முழுதும் வலம் வருதல்உட்பொருள் : அபான வாயுவைக் கொண்டு உடல் முழுமையும் இணைத்து விடுதல் – ஆன்மா உடலின் கட்டுபாட்டை தன் ஆட்சிக்கீழ் கொண்டு வருதல்
7. புராணம் : தருமர் சக்கரவர்த்தியாக மகுடம் சூட்டிக் கொள்ளல்உட்பொருள் : ஆன்மா உடலை ஆளும் ராஜா ஆதல் பெரிய கருத்துக்களை கதைகளாகக் கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர் – ஆனால் அதன் உண்மை வெளிவராமல் என்றும் கதைகளாகவே இருப்பது வருந்ததக்கது

சஞ்சீவி_தீர்த்தம்

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித_தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித_தீர்த்தம்:

1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் . இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.

Sunday, April 9, 2017

திருப்பம் கொடுத்த சிவாஜி

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர்

கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது.

இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது

பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை

பாபரின் வம்சாவளி அக்பர்தான் இந்துஸ்தானத்தில் ஆள இந்துக்கள் ஆதரவு அவசியம் என உணர்ந்தவர், அப்படி ராஜஸ்தான் இளவரசி ஜோத்பாயினை அவர் திருமணம் செய்து இம்மக்களோடு உறவாடிய பின்புதான் முகலாய வம்சம் இங்கு நிலைபெற்றது , அமைதி திரும்பியது

அந்த அமைதியில்தான் முகலாய அரசு வளம்பெற்றது, ஷாஜகான் போன்றோர் தாஜ்மஹால் போன்றவைகளை கட்ட முடிந்தது, இன்னும் பல கலை அடையாளங்கள் எழும்பின‌.

அதாவது இந்துக்களை அமைதிபடுத்தாமல் இங்கு ஆளவே முடியாது என்ற உண்மை, அவர்களை திருப்திபடுத்தி அமைதியாக்கினால் , இத்தேசம் அமைதியானால் அது எவ்வளவு வளமானது என்ற உண்மை விளங்கிகொண்டிருந்த நேரம்

அமைதியான இந்தியா அன்று செல்வத்தில் கொழித்துகொண்டிருந்தது..

ஆனால் இந்த யதார்த்ததை உணராத மன்னன் ஒருவன் வந்தார் அவர் பெயர் அவுரங்கசீப், கொஞ்சம் அல்ல நிறையவே வித்தியாசமான மன்னர்

ஷாஜகானை சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்தவர், ஆனால் மத கடமைகளில் கறாரானவர். மிக எளிமையாக வாழ்ந்தார் என்றுதான் அவரின் வரலாறு சொல்கின்றது, ஆனால் மத விவகாரங்களில் கெடுபிடி

இது இந்திய நிலையினை மாற்றிற்று, ஆங்காங்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பின, அவற்றில் விஜயநகர இந்து சாம்ராஜ்யம் போலவே முக்கியமானது மராட்டியர் குரல்

சிறிய குரலாக எழுந்த எதிர்ப்பின் சூறாவளியாக தோன்றியவர்தான் சிவாஜி, அவர் தந்தை சிற்றரசர். போர் கலைகளில் வல்லவரானார் சிவாஜி

முதலில் முகலாய பேரரசின் குறுநில மன்னர்களான சுல்தான்களுடன் அவருக்கு மோதல் இருந்தது, பல போர்களில் வென்றார், அவருடைய புகழ் பரவியது

அதாவது மிக சிறிய படையினை வைத்துகொண்டு பெரும் படைகளை வெல்லும் யுத்தபாணி சிவாஜியுடையது, வெற்றி மேல் வெற்றிபெற்றார், அப்பக்கம் சுல்தான்கள், இப்பக்கம் அவர்களுக்கு ஆதரவான தொடக்க பிரிட்டிஷ் படைகள் என இரு பக்கமும் வெற்றிபெற்றவர் சிவாஜி

ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும், அந்நாளில் வலிமையான கடற்படை வைத்திருந்த இந்திய மன்னன் சிவாஜி மட்டுமே, அவர் இருக்கும் வரை வெள்ளையர் அரசாள்வது பற்றி சிந்திக்கவே இல்லை

பல இடங்களில் அவர் வெள்ளையரை தட்டி வைத்திருந்தார்

அவுரங்க சீப்பும் சிவாஜியும் சந்திக்கும் வேளை வந்தது, இருவரும் பலசாலிகள், அவுரங்கசீப்பின் படை மிக பெரிது, யுத்தமும் நடந்தது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள்,

அதாவது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இறங்கியிருக்கின்றார்கள், ஆனானபட்ட அவுரங்கசீப்பே பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கின்றார் என்றால் சிவாஜி எப்படிபட்ட பிம்பமாக அவருக்கு தோன்றியிருப்பார் என்பது யாரும் எளிதில் யூகிக்க கூடிய விஷயம்..

ஆனால் அவுரங்கசீப்பின் அணுகுமுறை சிவாஜி யுத்த கைதி என்பது போல இருந்தது

காவலில் வைக்கபட்ட சிவாஜி தப்பினார், பின் வலிமையான படை திரட்டி யுத்தத்தின் தன்மையினை மாற்றினார்

அதாவது தென்னகம் முழுக்க முதலில் கைபற்றினார், செஞ்சி அவர்களின் இரண்டாம் தலைநகராயிற்று, அதன் பின் அசைக்க முடியாத மன்னர் ஆனார்.

அப்சல்கான் என எத்தனை திறமையான தளபதிகள் வந்தாலும் சிவாஜியின் வியூகத்தின் முன் நிற்கமுடியவில்லை

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இந்துக்களை மதித்து நடத்தினால் மட்டுமே ஆளமுடியும் என அக்பர் நிரூபித்ததை மறந்து, இல்லை வாளாலும் ஆளமுடியும் என கிளம்பிய  ஒளரங்கசீப்பின் பிடரியில் அடித்தவர் சிவாஜி

சிவாஜியும், நாயக்க மன்னர்களின் விஜயநகர சாம்ப்ராஜ்யமும் எழும்பவில்லை எனில் இஸ்லாமிய இந்தியாவாக என்றோ விஸ்தரிக்கபட்டிருக்கும்,ராஜ்புத் மன்னர்களுக்கு பின் பெரும் எதிர்ப்பினை ஆப்கானிய அரசர்களுக்கு கொடுத்தவர்கள் இவர்கள்.

வெறும் 53 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த சிவாஜி கிட்டதட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையினை போர்முனையிலே கழித்தவர், ஒயாத போர்களில் இருந்தவர்

ஒரு புதியபாணி போர்முறையினை அறிமுகபடுத்தியவர் அவர், கிட்டதட்ட அது செங்கிஸ்கானின் பாணி போன்றது, அந்த யுத்த முறையில்தான் சிவாஜிக்கு பின்னும் மராட்டியம் அவுரங்க சீப்பிற்கு தண்ணிகாட்டியது

தான் நினைத்ததை நடத்தமுடியாமலே மறைந்தார்  அவுரங்கசீப்.

அவரின் குழப்பமான நடவடிக்கைக்கு பின் முகலாய அரசும் வலுவிழந்தது, சுருக்கமாக சொன்னால் பெரும் சாம்ராஜ்யமான் முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவினை தொடங்கி வைத்தவர் சிவாஜி

ஒரு சாதாரண சிற்றரசன், பெரும் முகலாயருக்கு எதிராக, அதுவும்  இது பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் என மார்தட்டிய அவுரங்கசீப்பிற்கு எதிராக "இந்து ராஜ்யம்" அமைத்து காட்டியது பெரும் விஷயம், அதுவும் 20 ஆண்டுகளுக்குள் அமைத்தது பெரும் வீரம், ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

இது நான் அமைத்த இந்து ராஜ்யம், இதற்கு நான் சத்ரபதி என அவர் முடிசூட்டிகொண்டபொழுது தடுக்க யாராலும் முடியவில்லை

ஆப்கானியர் ஆளவந்த 800 ஆண்டுகாலத்தில் அவர்களுக்கு சவால்விட்டு முடிசூடிய ஒரே  இந்திய மன்னன் வீரசிவாஜி

முகலாயரையும், பிரிட்டிசாரையும் ஒருசேர கட்டுபடுத்திய அவரின் ஆற்றல்தான் வரலாற்றில் நின்றது

யுத்தம் என்பது சாதரண விஷயமல்ல, மக்களை வாழ வைக்க வேண்டும், அவர்களிடமிருந்து வரி பெறவேண்டும், பின் படை திரட்ட வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், இன்னும் ஏராள சங்கதிகள் உண்டு, ஒன்றில் சறுக்கினாலும் முடிந்தது விஷயம்

ஆனால் தொடர்ச்சியாக ஏராளமான போர்களை சிவாஜி நடத்தினார் என்றால், அதுவும் பெரும் பேரரசினை எதிர்த்து நடத்தினார் என்றால் அவரின் அணுகுமுறையும், நிர்வாகமும் முக்கிய காரணம்.

இந்திய வரலாற்றில் அந்த வீர சிவாஜி பெரும் இடம் ஏன் பிடித்திருக்கின்றார் என்றால் இப்படித்தான்

இன்று அவரின் நினைவுநாள்

அன்றே அந்நியருக்கு எதிராக பெரும் கனலுடன் சுழன்று, அவர்களுக்கு சம்மட்டி அடி அடித்த சிவாஜி பெரும் அஞ்சலிக்குரியவர்

அவரை போலவே எல்லா மன்னர்களும் பிரிட்டிசாரை கட்டுபடுத்தி வைத்திருந்தால் வரலாறு மாறியிருக்கும், முதன் முதலில் இந்தியாவில் பிரிட்டிசாரை பற்றி எச்சரித்தவர் சிவாஜிதான்

அவர்களை ஆதரித்த பின்னாளைய சுல்தான்களும் ,நிஜாம்களும் பின்பு வாங்கிகட்டி கொண்டனர்

இந்திய வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்தவர் மாவீரன் சிவாஜி, அவருக்கு இத்தேசம் கடமைபட்டிருக்கின்றது..

ஶ்ரீ ராமானுஜர்

செய்த சில செயற்கரிய செயல்களே அவரை உன்னத மகானாக மாற்றியது எனலாம். வைதீகர்கள் இடையில் சாதிப்பித்து தலைக்கேறியிருந்த காலத்தில் அவர் பேரருளாளன் முன்பு அனைவரும் சமம் என்ற செய்தியை உரக்கக்கூவினார்.

தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி. பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயலகளை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.

திருக்கோட்டிநம்பி ரகசியமாக சொன்ன மந்திரத்தை மற்ற அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்று மதில்மேல் நின்றுகொண்டு கூவினார்.

ராமானுஜர் மட்டுமல்ல, அவருடைய ஆச்சாரியரான ஆளவந்தான் சுவாமிகளும், அவருடைய பிரதான சிஷ்யரான பெரியநம்பியும் சாதிபேதம் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தானோ என்னவோ ராமானுஜரால் ஸ்ரீமன் நாராயணனை சகலருக்கும் கொண்டு செல்ல முடிந்தது.

இந்தப் பரமபத கூட்டத்தில் மாறனேர்நம்பி வந்து சேர்ந்தவிதம் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். ஒருமுறை தாழ்குலத்தில் பிறந்த மாறனேர்நம்பி நீர்வயலில் அமர்ந்து சேற்றை எடுத்து உண்டுகொண்டிருப்பதை ஆளவந்தார் கண்ணுற்றார். மாறனேர்நம்பியிடம் சென்று அவர் சேற்றை உண்ணும் காரணத்தைக் கேட்டார். அதற்கு மாறனேர்நம்பி தன்னைப் பொருத்த வரையில் சேறும் சோறும் ஒன்றுதான் என்று கூறியதும் நம்மாழ்வாரைப போன்று இவரும் பிறவி ஞானி என்பதை உணர்ந்த ஆளவந்தார் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார்.

இந்த மாறனேர்நம்பி இறந்ததும் பெரியநம்பி தானே முன்னின்று ஈமக் கிரியைகள் செய்து வைத்தார். இதை மற்றவர்கள் எதிர்க்கும்போது ராமானுஜர் பெரியநம்பியின் மீது ஐயம் கொண்டு அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டார்.

“ஜடாயு வெறும் பறவை. அதற்கு ஸ்ரீராமன் இறுதிச் சடங்குகளை செய்தான். விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தருமன் அவருக்கு இறுதிக் கிரியை செய்தான். எம்பெருமானின் பக்திக்கு ஆளானவர்களுக்கு குலம், கோத்திரம் கிடையாது. மாறனேர்நம்பி என்னிடம் உபதேசம் பெற்றவன். பரமனின் பரமபக்தன். எனவே அவனுக்கு நான் இறுதிச் சடங்கு செய்வதில் தவறில்லை” என்றார்.

இதை கேட்ட மறுகணமே ராமானுஜர் பெரியநம்பியின் பாதங்களில் விழுந்து வணகினார். இத்தனைக்கும் அந்தச்சமயம் ஸ்ரீரங்கம் மடத்தின் ஆச்சாரியராக ராமானுஜர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார். இந்தத் தூய்மைதான் அவரை மகானாக மாற்றியது.

இதேபோல சோழநாடுவிட்டு நெடுந்தூரம் வடக்கே பயணமான ராமனுஜரும் அவருடைய சீடர்களும் ஒரு புலையர்களின் குடியிருப்புப் பகுதியில்தான் அடைக்கலம் புகுந்தனர். அந்தப் புலையர்கள் கொடுத்த பழங்களையும் நீரையும் பருகிவிட்டு அந்த நாட்டு அரசனான விட்டலதேவன் அரசவைக்கு செல்கின்றனர்.

இங்கே மீண்டும் ஒரு அரசகுமாரி அவளுக்கும் மனோவியாதி பீடித்திருக்கிறது. அந்த அரசகுமாரியின் நோயை போக்கியதோடு சமண சமயம்பால் பற்று வைத்திருந்த அந்த விட்டலதேவனின் மனதை வைணவம் பக்கம் மாற்றுகிறார். அரசவையிலிருந்த சமணப் பண்டிதர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடம் சமயவாதம் செய்து அவர்களில் பெரும்பாலோரை வைணவ மதத்திற்கு மாற்றுகிறார். மன்னனும் சமண சமயத்தை விடுத்து வைணவ மதத்திற்கு மாறினான். அந்த மன்னனின் விட்டலதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றி வைக்கிறார்.

அங்கிருந்துபுறப்பட்டு யதுகிரி என்ற இடத்தை அடைகிறார். அங்கே பூமிக்கடியில் மிகப்பெரிய நாராயண மூர்த்தியின் கற்சிலை கிடைக்கிறது.

இஸ்லாமியரின் படையெடுப்பின்போது கொடிய இஸ்லாமிய மன்னர்களுக்கு அஞ்சி நமது கடவுளின் திருவுருவச் சிலைகளை காப்பாற்றுவதற்காக மண்ணில் புதைத்து வைப்பது நமது முன்னோர்களின் வழக்கம் . அப்படி ஒரு சிலைதான் ராமானுஜருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிலையை பிரதிஷ்டை பண்ணி அந்த ஊர் மன்னன் மூலமாக ஒரு கோவிலும் எழுப்புகிறார். அந்தக் கோவில் காரணமாக அருகல் ஒரு கிராமமே உருவாகிறது. இந்த நகரம் இன்று மேலக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

நமது தென்னிந்தியக் கோவில்களில் இறைவனுக்கு இரண்டு மூர்த்திகள் உண்டு. ஒன்று மூலமூர்த்தியான கற்சிலை. இரண்டாவது உற்சவமூர்த்தி. இந்த உற்சவமூத்தி ஐம்பொன்னால் செய்யபட்டிருக்கும். மூலவரைவிட அளவில் மிகச் சிறியதாக தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருக்கும். யதுடிரியில் ராமனுஜருக்கு மூலவிக்கிரகம் மட்டுமே கிடைத்தது. உற்சவமூர்த்தி கிடைக்கவில்லை. இந்தக் கவலையுடனே அவர் இருந்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி “ராமானுஜா!என்னுடைய செல்லப்பிள்ளையை –அதாவது உற்சவ மூர்த்தியை- தில்லி பாதுஷா கொண்டு சென்றிருக்கிறான். அவன் அரண்மனையில் தேடு கிடைக்கும்” என்கிறார்.

உடனே ராமனுஜரும் அங்கிருந்து நெடுந்தொலைவில் உள்ள தில்லி நோக்கி பயணிக்கிறார். தில்லி பாதுஷா ராமானுஜரின் தோரணையைக் கண்டு அவருக்கு தக்க மரியாதை செலுத்தி (இவ்வாறு நடந்திருக்க சாத்தியமே இல்லையென்றாலும்,  நமக்குக் கிடைக்கும் செய்திகளைக் கொண்டுதான் சிலநேரங்களில் வரலாற்றை எழுத வேண்டியுள்ளது) தான் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை ஒரு மண்டபத்தில் போட்டுவைத்திருப்பதாகவும் அந்த அறைக்குள் சென்று அவர் தேடிவந்த விக்கிரகத்தை எடுத்தக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

பலவிக்கிரகங்களுக்கு மத்தியில் ராமானுஜரால் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட அந்த உற்சவமூர்த்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது தில்லி பாதுஷா தனது மகள் பீபீ லகிமார் என்ற அரசகுமாரி ஒரு நாராயண விக்ரகத்தின் மேல் மாறாக் காதல் கொண்டுள்ளாள் என்று ஒரு விக்கிரகத்தைக் காட்டினார். அந்த விக்கிரகம்தான் மேல்கோட்டை நாராயணின் உற்சவமூர்த்தி என்பதைக் கண்டு கொண்ட ராமானுஜர் மன்னனின் அனுமதியோடு அதனை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார்.

ராமானுஜர் தனது அடியார்களுடன் தெற்குநோக்கி விரைந்து சென்றார். ஏனெனில் மன்னரின் மகள் அந்த விக்கிரகம் காணாமல் கண்டிப்பாகத் தேடுவாள் அரசனும் மீண்டும் விக்கிரகத்தை எடுத்துக் கொள்ள, தங்களை பின்தொடர்வார்கள் என்பதால் விரைந்து சென்றனர்.

அவர்கள் பயணத்தின்போதுசில புலைய சாதியை சேர்ந்த மக்கள் ராமனுஜருக்கு உதவினார்கள். அவர்கள் உதவியுடன் மேல்கோட்டையில் ஒரு ரகசியமான இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். புலையர்கள் இந்தத் தொண்டிற்கு உதவியதால் அன்றுமுதல் வருடத்தில் மூன்று நாட்கள் அவர்கள் ஆலயத்தினுள் சென்று வழிபடும் உரிமையை ராமானுஜர் பெற்றுத் தந்தார்.

ஆலயப்பிரவேசம் என்று சென்ற இரு நூற்றாண்டுகளாகத் தான் நாம் கூறுகிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வைதீகர்களின் பார்வையில் கீழ்ஜாதி எனக்கருதப்பட்டவர்களும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று புரட்சி செய்தவர் ராமானுஜர்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...