Tuesday, February 4, 2020

ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். 

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். 

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன். 

“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். 

நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார். 

“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன். 

“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர். 

பல ஆண்டுகள் கழிந்தன. 

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். 

“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். 

அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். 

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். 

அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். 

“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர். 

"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.

இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார். 

மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். 

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது. 

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”
                    
பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். 

இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல’ என்று அழைக்கப்படுகிறார்.

சியாமளா தண்டகம்

காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன். 

ஒருநாள்  பகலில் எங்கோ பட்டை தீர்க்கும்  வெயிலில்  மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு  தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்.  சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க்  கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்ததைப்  பார்த்ததும்  நெஞ்சு வறட்சியும்  தாகமும்  அவளை நோக்கி செல்ல வைத்தது.   

''அம்மா  கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா  தருகிறேன்.. நீ  யாரப்பா?''
 இவள்   பார்த்தால்  நிரக்ஷர குட்சிபோல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி  எதற்கு சொல்லவேண்டும்.  அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன்  ''அம்மா  நான் ஒரு  யாத்ரீகன்' என்றான்.

'அதென்னப்பா  அப்படி சொல்கிறாய்?  இந்த உலகத்திலேயே   ரெண்டே ரெண்டு  பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன்.  இவர்கள் தானே  காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை  ஒருவன்,  இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை  இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில்   ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா,  அப்படியென்றால் நான் ஒரு  விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம்  புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் .   இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான்  அதிதி.விருந்தாளிகள் .  வந்து போய்விடுபவர்கள்.   இளமையும்  செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை''  என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் திகைத்தான்.  ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.  ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா?  இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்   ''அம்மா  அப்படி யென்றால்  நான்  ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.

அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக  இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது.  மற்றொன்று  விருக்ஷம், மரம்.  வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே   நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா?  சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான்   ''அம்மா  நான் இந்த உலகிலேயே  ரொம்ப பிடிவாதக்காரன்  சளைக்காதவன் '  புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.

குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண்.  உனக்கு உலகிலேயே பிடிவாதமாக  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செயல்படுவது ரெண்டு  தான் என்று தெரியாதா ?  ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி.   வெட்ட வெட்ட  துளிர்த்து வளர்பவை.ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ  அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?''  என்றாள்  அவள்.

கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு.   உரக்க  அவளிடம் சொன்னான்  ''சரி சரி  நீ என்னை உலகிலேயே சிறந்த  ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக  பதில் வைத்திருந்தாள் .

''அப்பனே  உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன்.  இன்னொருவன்  அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி  போட்டுக்கொண்டு  அவனையே புகழ்ந்து கொண்டு  அவன் பின் செல்பவன்.  உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே''  என்றாள் .

''அம்மா  என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று  என்னை கேட்டாய்  எனக்கு பதில் தெரியவில்லை,  இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' அவள் காலில் விழுந்தான் காளிதாசன்.  எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த  காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள்.   இரு  கை கோர்த்து கும்பிட அவனை பார்த்து 
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு  சாதாரண மனுஷ்யஜீவன்   என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள்.    அப்போது உருவானதே   காளிதாசனின் சியாமளா தண்டகம். 

நாம்  சாதாரண ஜீவன்கள்  ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு  அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும். சதா இந்த சிந்தனை இருந்தால் அதுவே  பகவான் மேல் பக்தியை வளர்க்கும். அறிவை வளர்க்கும்.


பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...