Friday, August 21, 2015

""விதி வலியது""


இந்திரன் மனைவி 'இந்திராணி' ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, 'இந்தக் கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன்' என்றாள். இந்திரன், 'கவலைப்படாதே இந்திராணி. நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன். ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம்' என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்.
விஷயத்தை கேட்ட பிரம்மா , 'இந்திரா, படைப்பது மட்டுமே என் வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம். வா.. நானும் உன்னுடன் வருகிறேன்' என்று இந்திரனை அழைத்துக் கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார்.
மஹாவிஷ்ணுவோ, 'உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில் இருக்கிறதே! அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் பெருமான் தான் அதைக் காப்பாற்ற வேண்டும். வாருங்கள்.. நானும் உங்களுடன் வந்து சிவபெருமானிடம் பேசுகிறேன்' என்று கிளம்பினார்.
விபரங்களை கேட்ட சிவன், 'அழிக்கும் தொழில் என்னுடையது தான். உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள்.. நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று முறையிடுவோம்' என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு எமலோகம் செல்கிறார்.
தன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்.
விஷயம் முழுவதையும் கேட்ட அவர், 'ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், என்ன கார‌ணத்தால் எடுக்க வேண்டும் என்ற காரணத்தை, ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை என்று அறுந்து விழுமோ, அன்று அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள்.. அந்த அறைக்குச் சென்று, கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து, அதை மாற்றி எழுதிவிடுவோம்' என்று அவர்களை அழைத்துச் செல்கிறார்.
இப்படியாக, இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச் சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை. அவசரமாக அதைப் படித்து பார்க்கின்றனர்.
அதில்,,,
"இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ, அப்போது இந்த கிளி இறந்துவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...