Wednesday, January 22, 2020

எமனின் சாமர்த்தியம்

ஒருவருக்கு தேதி குறித்து விட்டால்? அந்த தேதியில் அவர் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள்!

அப்படி ஒரு சிற்பிக்கு எமன் தேதி குறித்து விட்டார்! அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரிந்து விட்டது!

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை!

எமன் ஒருமுறைதான் பாசக்கயிறை வீசுவார்! அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்!

அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிற்பி ஒரு யுக்தி செய்தார்!

தன் திறமையை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார்! 

எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்து விட்டு அதன் நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக் கொண்டு விட்டார்!

எமன் வந்தார், பார்த்தார்! சற்றே திகைத்துப் போனார்!

மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு மட்டும்தான் சிலைகள் என்பதை யூகித்துவிட்டார்!

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு நேர்த்தி!

தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே?

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது!
யோசித்தார்; ஒரு யோசனை வந்தது!

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், "அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது! என்னாலேயே எது சிலை எது மனிதன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?" இப்படி சொல்லி விட்டு மூன்று சிலைகளையும் எமன் உன்னிப்பாக கவனித்தார்!

அவர் எதிர்பார்த்தது நடந்தது!

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது!

தற்பெருமைதான், வேறென்ன? சடாரென வீசினார் கயிற்றை!

கெடுத்தது எது?

நான் என்ற தேகாபிமானத்தில் வீழ்ந்து விடுவதுதான் கொடுமை!

ஈகோ, எதிர்பார்ப்புகள், புகழுக்கு மனம் இலயித்துப் போவது தான் மனித மனதின் பலவீனம்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...