Sunday, June 13, 2021

போதனா

ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தவர் போதனா. சிறு வயதிலேயே கவிதை எழுதினார். வீரபத்ர விஜயம் எழுதும்போது அவருக்கு வயது பத்து. ராஜகொண்டா சமஸ்தான அரசர் சிங்கபூபாலர் அவரை ஆஸ்தான கவிஞராக நியமித்துப் பல பரிசுகள் அளித்தார். ஆனால், ராமனைத் தரிசிக்கும் ஆசையில் வெகு சீக்கிரம் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். கோதாவரி தீரத்தில் யோகத்தில் ஆழ்ந்து பரந்தாமனைத் தரிசித்தார். கவி சார்வபௌம ஸ்ரீநாதர் தன் சகோதரியை போதனாவுக்கு மணமுடித்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. நிலத்தில் உழும்போதே இசை பாகவதம் எழுதத் தொடங்கினார். பயிரோடு பாகவதமும் வளர்ந்தது. ஒரு நாள் அமைத்த வார்த்தைகள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. மன வருத்தத்தோடு வரப்பில் படுத்து உறங்கி விட்டார். எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் முடிக்கப்பட்டிருந்தது. பகவான் வந்து பாடலை எழுதியபோது பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். இந்த விஷயம் மன்னர் செவிக்கு எட்ட, பாகவதத்தை அரசவையில் பாட வரும்படி அழைப்பு விடுத்தார் மன்னர் போதனா, கோவிலியே பாகவதம் அரங்கேறும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

போதனாவின் தமையனார், ஆதிமூலமே... என்று கஜேந்திரன் அழைத்தவுடன் இரு தேவியருடன் கருட வாகனத்தில் வந்ததாக பாகவதம் சொல்கிறது. நீ உத்தரீயம் நழுவ, கதாயுதமும், சக்கரமும் கொண்டு கிரீடமும் தரிக்காமல் விரைந்து வந்ததாகப் பாடல் புனைந்திருக்கிறாய். புராணத்தை நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது. திருத்தி எழுதிக் கொண்டு வந்தாலே கோயிலில் அரங்கேற்றலாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். போதனா எதுவும் பேசவில்லை. அன்று சனிக்கிழமை தமையனார் ஒரு சிறு துண்டோடு கிணற்றடியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். பெரிய கிணறு. தமையனாரின் ஐந்து வயதுப் பையன் வேத கிரி, அதனருகில் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான். கண்களில் எண்ணெய் கட்டிக் கொள்ளும் அந்தக் கால வழக்கப்படி கண்ணை மூடிக் கொண்டிருந்தார் தமையன். போதனா, வேதகிரிக்குத் தின்பண்டங்களும், விளையாட்டுச் சாமான்களும் கொடுத்துத் தூக்கிக் கொண்டு போய் மறைவாக விட்டார்.

கிணற்றில் ஒரு கல்லைப் போட்டார். கிணற்றிலே என்னை விழுந்தது? என்று தமையனார் குரல்கொடுக்க, உள்ளேயிருந்து பெண்கள் ஓடி வந்தனர். வேதகிரி விழுந்து விட்டானண்ணா என்று கவலையோடு போதனா கூற, அவரது தமையனார் பதற்றத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கிணற்றில் இறங்க முயன்றார். என்னண்ணா! தண்ணீரெல்லாம் எண்ணெய்யாகும். கைபிடி வழுக்கும், சீக்கிரம் குளித்து உத்தரீயம் தலைப்பாகை, நெற்றியில் திலகம் அணிந்து வாருங்கள் என்று தடுத்தார் போதனா. முட்டாள்! குழந்தை உயிருக்குப் போராடுகையில் அலங்காரமா? என்று சீறினார் தமையன். உங்களுக்கொரு தர்மம்! பகவானுக்கொரு தர்மமா! காலில் உதிரம் சொட்ட நீருக்குள் இழுபடும் கஜேந்திரனைக் காப்பாற்ற பகவான் தேவியரைத் தேடிக் கொண்டு அலங்கரித்துக் கொண்டா வருவார்...? பத்திரமாய் இருக்கிறான். கவலைப்பட வேண்டாம் என்று போதனா, வேதகிரீ என்று குரல் கொடுக்க ஓடி வந்தான் வேதகிரி. போதனா, பாகவதத்தை சங்கீதமாய் கோயிலில் அரங்கேற்ற அரசரும் வந்து, பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதேபோல் பிரகலாத  சரித்திரம், ருக்மணி கல்யாணம் ஆகியவற்றையும் இயற்றியிருக்கிறார் பக்த போதனா.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...