Wednesday, June 17, 2020

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோவில் !!

ஆரூர் அகிலேசுவரர் கோவில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோவிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.

மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்
உற்சவர் : அரநெறியப்பர்
தாயார் : வண்டார்குழலி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்
புராண பெயர் : ஆருர் அரநெறி
ஊர் : ஆருர் அரநெறி
மாவட்டம் : திருவாரூர்

தல வரலாறு :

நமிநந்தியடிகள் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோவிலில் உள்ள எம்பெருமானை வழிபட்டு வந்தார்.

இக்கோவிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோவில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோவிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார்.

கோவில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா? என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோவில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோவிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே? என கேலி பேசினார்.

இதனால் வருத்தமடைந்த அடிகள் கோவிலுக்கு வந்து, இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.

இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக, அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்.

கோவில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோவிலுக்கு தலைவராக்கி, கோவிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

தலபெருமை :

கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.

தல சிறப்பு :

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...