Thursday, February 18, 2021

தமிழும் சமஸ்கிருதமும்

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!

ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி"

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...