Thursday, September 3, 2015

எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் !


 
ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.

பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவி
யலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.

அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக்.

அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.

- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...