Tuesday, August 20, 2013

விசாகம்



     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினாராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1,2,3&ஆம் பாதங்கள் துலா ராசிக்கும், 4&ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் வயிற்றின் கீழ் பகுதி, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் போன்றவற்றை ஆளுமை  செய்கின்றன. 4&ம் பாதம் சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறுகுடல் போன்றவற்றை ஆள்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் தி, து,தே, தோ தொடர் எழுத்துக்கள் தூ,தை ஆகியவை.

குண அமைப்பு
     
விசாக நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பர்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துறைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள் நல்ல நீதிமானாகவும், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேச கூடியவராகவும் இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தன்னுடைய கொள்கைளிலிருந்து எந்த நெருக்கடியான நேரத்திலும் மாறமாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களை மதிக்கும் பண்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பும் சமுதாயத்தில் பெயர் புகழை உயர்வடைய செய்யும், பல கோடி கொட்டி கொடுத்தாலும் பொய் பேச மாட்டார்கள்.

குடும்பம்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்ய கூடிய  நிலையும், ஏற்கனவே மண மானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். நல்லவருக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவராகவும் நடந்து கொள்வார். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வார். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டையிட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கரை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை யிருக்கும். அடிக்கடி நோய் வாய்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்கனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.

தொழில்;
     
விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  சிறு வயதில் சில சங்கடங்களை சந்தித்தாலும் 23 வயதிற்கு மேல் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும் தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.

நோய்கள்;
     
உடல் நலத்தில் மீது அதிக அக்கரை எடுத்து கொள்ளாத காரணத்தால் அடிக்கடி நோய் வாய் படுவார்கள். பலமற்ற இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதய சம்மந்தப்பட்ட நோய்கள் சிறு நீரகங்களில் பாதிப்புகள் உண்டாகும்.

திசை பலன்கள்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் குரு திசை மொத்த வருட காலங்கள் 16 என்றாலும், பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறியலாம். பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் திசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியோர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
    
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்பட நேரிடும்.
     
மூன்றாவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
     
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக  தெய்வீக காரியங்களில் நாட்டமும் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
    
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.

ஸ்தல மரம்;
விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.குயவன்  சக்கரத்தை போல ஐந்து நட்சத்திரங்கள் கொத்தாக இருக்கும். இதை ஜீன் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
சிற்ப கலை கற்றல், நாட்டியம் பயிறுதல், அக்னி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவ புத்ரு பூஜை விதை விதைத்தல், கிணறு குளத்தை சீர்படுத்துதல், வியாதிக்கு மருந்துண்ணுதல் போன்றவற்றை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
அத்தாள நல்லூர்;
     நெல்லை மாவட்டம் வீர நல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
திருநின்றியூர்;
     மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமி புரீசுவரர்&உலகநாயகி அருள் பாலிக்கும் திருஸ்தலம்.
கபிஸ்தலம்;
     தஞ்சை, பாப நாசத்துக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் கும்ப கோணம் திருவையாறு சாலையில் விளாமரங்கள் நிறைந்த ஸ்தலம் மூலவர் கஜேந்திர பெருமாள் தாயார் ரமாமணிவல்லி
கூற வேண்டிய மந்திரம்;
     ஓம் தத்புருஷாய வித்மஹே
     மஹாஸேனாய தீமஹி 
     தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்

விசாக நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...