Monday, June 15, 2015

இல்லாதோருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததாகும்

ஒரு மகாராஜா வருடம் தோறும் வெங்கடேசருக்கு ரூ 1000 பொற்காசுகளை உண்டியலில் போடுவது வழக்கம். ஒரு முறை, சுகவீனம் காரணமாக அவருக்குப் போக முடியவில்லை. ஆகவே தனது அமைச்சரை அழைத்து 1000 பொற்காசுகளை அவரிடம் கொடுத்து, திருப்பதி வெங்கடேசர் கோவில் உண்டியலில் போடும்படி அனுப்பி வைத்தார்.

கோவில் கிட்ட இருந்த காரணத்தினால் கால் நடையாகவே சென்றார். அமைச்சர் போகும் வழியில் பல பிச்சைக்காரர்கள் கை நீட்டி நின்றனர். அவர்களுக்கும் கொடுத்துக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார். உணவு பற்றாக்குறையால் உடல் மெலிந்து நின்ற நாய்கள் சில இவரைப் பார்த்து வால் ஆட்டின. கருணை உள்ளம் கொண்ட அமைச்சர், நாய்களுக்கும் உணவு வாங்கிக் கொடுத்தார். கடைசியில் உண்டியலுக்குப் போடுவதற்கு 100 பொற்காசுகள் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த 100 பொற்காசுகளையும் உண்டியலில் போட்டுவிட்டு அரண்மனை திரும்பினார்.

மன்னர் அவரை அழைத்து 1000 பொற்காசுகளை உண்டிலுக்குள் போட்டதா என்று கேட்டார். அமைச்சர் நடத்தவற்றைக் கூறி, 100 பொற்காசுகளை மட்டுமே உண்டியலில் போட்டதாகச் சொன்னார். 1000 பொற்காசுகளையும் உண்டியலில் போடாததற்கு அமைச்சரை மன்னர் திட்டித் தீர்த்தார். ஒரு வேளை அமைச்சர் 900 பொற்காசுகளையும் எடுத்து விட்டு இப்படிக் கதை அளக்கிறாரோ என்று யோசித்தபடியே அன்று உறங்கினார்.

அன்று இரவு கனவில் வந்த திருப்பதி வெங்கடேசர் "நீ கொடுத்தனுப்பிய 900 பொற்காசும் எனக்குக் கிடைத்தது" என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை மனம் தெளிந்த மன்னர், அமைச்சரை அழைத்து புன்முறுவல் பூத்தார். அதன் பிறகு, போகும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு தானதருமம் வழங்கி, மிகுதியையே உண்டியலில் இட்டு வந்தார்..

ஆகவே, எம்மிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததாகும்...

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...