Wednesday, September 26, 2012

ஒரு மனிதனுக்கு எதனால் போரடிக்கிறது?



1. பார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால்

2. செய்யும் பணியிலே எந்தவிதமான மாறுதலும் இல்லாததால்

3. மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில் ஆர்வமின்மை.

4. சோம்பேறித்தனம் - இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்

5. பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்குமா? இல்லை. ஒரு குழுவாக - கூட்டமாக - இருப்பவர்களுக்கும்கூட பல நேரங்களில் போரடிக்கிறதே!

6. காதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது

7. போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்து சண்டை போடும் மாவீரனுக்கும்கூட போர் முடிந்தபிறகு வரும் அமைதியைக்கண்டால் போர்தான்.

8. அமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப் போரடித்ததால்தானே குட்டிக்குட்டிக் கதைகளாக பஞ்சபாண்டவர்களுக்குச் சொன்னார்கள்.

9. செய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல் மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும்.

10. பரீட்சைத்தாள் விடை திருத்துபவனுக்குப் போரடித்தால் என்ன செய்வான்? "படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". நன்றாகப் படித்து அருமையாக எழுதிய அறிவழகனுக்கும் 65 சதவீதம்தான். ஒன்றுமே படிக்காமல், ஏனோதானோ என்றெழுதிய ஏகாம்பரத்துக்கும் 65 சதவீதம்தான்.

11. போரடிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக சுற்றுலாப்பயணம் செய்கிறான் சுரேசு. ஆனால் அவனுக்குப் பேருந்துப்பயணம் போரடிக்கிறது. அவனால் அவனுடைய இருக்கையிலே சும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான்.

12. அழகான மனைவி - அருமையான வேலை - அறிவான குழந்தை(கள்) - கண்ணெதிரே கடற்கரை - காதை வருடும் மெல்லிசை - மேனியைத் தழுவிச்செல்லும் மெல்லிய தென்றல் - இவையெல்லாம் இருந்தும் அதை அனுபவிக்காதவனுக்கு அடிக்கிறது போர். இவனுமேகூட சில நேரங்களில் 'என்ன வாழ்க்கை என்று' சலித்துக்க்கொள்கிறான்.

13. கோவிலுக்குச் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று ஆலயதரிசனம் செய்யக்கிளம்புகிறாள் கோகிலா. அவளது நிம்மதி ஆலயத்தின் வாசலிலேயே தொலைகிறது. பிச்சைக்காரர்களின் தொந்தரவால். அவளும் இன்முகத்துடன் சில்லறைகளை அவர்களிடம் தருகிறாள்.திடீரென்று அவள் மனதில் மின்னல் வெட்டு - பிச்சையெடுப்போனின் கிழிந்த உடைகளைக் காண்கிறாள். "தான் அடுத்த சென்மத்திலே இப்படி ஒரு பிச்சைக்காரியாக(காரனாக) - பிறந்துவிடுவோமோ?" எனக் கவலை கொள்கிறாள். இன்று இருக்கும் இனிமையை அனுபவிப்பது மறந்து அடுத்த சென்மத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துக் கவலைப்படுகிறாள். இப்போது சாமிதரிசனமே கோகிலாவுக்கு பெரும் போரடிக்க ஆரம்பிக்கிறது.

14. கைதேர்ந்த மென்பொருளாளன் கணேஷ். அவன் வளைக்கிற வளைப்புக்கு 'கூகுளும்' வளைகிறது. புராஜக்டும் முடிகிறது. பெஞ்சில் இருக்கிறான். அப்போது அவனுக்கும் அடிக்கிறது மிஸ்டர். அன்ட் மிஸ்ஸஸ் போர்.

15. அரசியல்வாதிக்கோ லஞ்சம் வாங்கிவாங்கிப் போரடித்துப்போகி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமே என்று யோசிக்கிறான். என்ன பலன் அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடுகிறது.

16. ஐந்தாம் வகுப்புக்கான அறிவியலை - 15 வருடமாகத் திரும்பத்திரும்பப் பாடமெடுக்கிறார் ஆசிரியர் 'ஆடியபாதம்'. அவருக்கு அறிவியல் போரடித்தால் என்ன செய்யமுடியும். விதியைத்தான் நொந்துகொள்ள முடியும். ஏன் என்றால் அறிவியல் பாடத்தில்தான் மிதப்பு விதி, நியூட்டன் விதி, பொருண்மை அழியா விதி - எனப் பலப்பல விதிகள் உள்ளன.

17. அது மெதுவாக ஓடிவரும் போட்டி. யார் கடைசியாக மெதுவாக ஓடி வருகிறாரோ அவர்களுக்கே பரிசு கொடுப்பார்கள். நம்ம 'தலை'க்கோ திடீரென்று போரடிக்க ஆரம்பிக்கிறது. என்ன செய்தார்? மடமடவென்று வேகமாக ஓடி முதலில் வந்துவிட்டார்.

18. இராணுவத்தில் இருப்பவனுக்கு துப்பாக்கி சுடாமல் சும்மா இருப்பதென்றால் போர். அவன் என்ன செய்தான்? "தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான்".

19. கண்டிப்பாக இதைப்படித்த உங்களுக்கும் போரடித்து இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனது போரடித்தல் வியாதியை உங்களுக்குப் பரப்பிவிட்டுவிட்டேன்.

20. இதையும் மீறி உங்களுக்குப் போரடிக்கும்போதெல்லாம் - இந்தக்கட்டுரையை யாருக்காவது ஈ-மெயில் அனுப்பிக்கொண்டே இருங்கள்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...