அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க
இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசு அறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச்சிவ சுப்பிரமணியன் காக்க
ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசுஇலா மார்பை ஈர ஆயுதன் காக்க எந்தன்
ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க
புறம் கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க பின் முதுகைச் சேய் காக்க
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண்நேர ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க
ஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க
ஐயுறு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன் அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிரிகொள் எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்களும்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர்பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப்பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளை வேல் காக்க
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்கு ஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க
சலத்தில் உய்வன் மீன்ஏறு தண்டுடைத் திருக்கை மற்று
நிலத்திலும் சலத்திலும் தான் நெடிந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க
ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரககக் கோள் காக்க
சுமவிழி நோய்கள் தந்த சூலை, ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம், சோகை சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிரு புயன் சயவேல் காக்க
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
குமுறு விப்புருதி குன்மம் குடல்வரி ஈழை, காசம்
நிமிரொணா(து) இருத்தும் வெட்டை நீர்ப் பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்தப்
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சத்திவடி வேல் காக்க
தவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோசகம்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
அவதி செய் பேதி, சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல்தொழு நோய்க்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப் பகந்த(ர) ஆதி
இமைப் பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க
மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள்ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல் முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்வின் காக்க
சக்ரமோடு ஆறும் ஆனோன் தன் கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவமோலி திகழைவேல் கீழ்மேல் காக்க
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர் காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க
லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழ் எனை நிருதி திக்கில் நிலைபெறாக் காக்க மேற்கில்
இகல் அயில் காக்க வாயு வினில் குகன் கதிர்வேல் காக்க
வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில் கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும் கிரிதுளைத்துளை வேல் காக்க
இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்ஊன் <உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும் குணத்தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன் எல், ஓம் சிவசாமி காக்க
தெளிநடு பிற்பகல்கால் சிவகுரு நாதன் காக்க
இறகுடைக் கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழ குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க
இனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அனுபூதி சொன்ன நாதர் கோன் காக்க, இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுள் தான் காக்க வந்தே
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment