Sunday, July 8, 2018

சித்தர் சிவவாக்கியர்

மிகவும்   புரட்சிகரமான சிந்தனையை உடையவர் சிவவாக்கிய சித்தர்.  ஆரம்பத்தில்     நாத்திக வாதம்  போல பேசி வரும்    சிவவாக்கியர், பிறகு   சிறந்தச்  சிவபக்தராகக் காட்சியளிக்கின்றார்;    அவரே  இறுதியில்  ஞானம் முதிர்ந்த வேளையில்   எல்லாவற்றையும் விட   சிவபெருமானே  துதிக்கும்  "  ராமா"   என்ற தாரகமந்திரமே    சிறந்தது   எனக் கண்டு கொள்கிறார்.    மிகவும் மாறுபட்டச் சிந்தனையை உடைய   சிவவாக்கியரைப் பற்றி    சிறிதளவு   காண்போம்.

            சித்தர்  இலக்கியத்தில்  சிவவாக்கியர்  பாடலுக்குத்  தனி  மரியாதை
தரப்படுவதுண்டு,  காரணம்,   இவர்   பாடல்களில்   வழக்கமான   சித்தர்
கருத்துக்கான  யோகம்,  குண்டலினி,  நிலையாமை  போன்ற  கருத்துக்களுடன் புரட்சிகரமான  கருத்துக்களையும்  கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்  கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக  இருந்து  ஆத்திகராக  மாறினார்  என்பதை  இவரின்  பாடல்  கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி  இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக ஆனார் என்றும்  கூறுவர்.

     சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.

"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

நட்டு  வைத்த கல்லை  தெய்வம் என்று  நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச்  சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்;
மொணமொண  என்று ஏதோ மந்திரங்களையும்  சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
அட  மூடர்களே, கடவுள் என்பவர்,   தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ என்கிறார் சிவவாக்கியர்.
    
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

     சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது  போலவே மனக்கோயிலினுள் இறைவன்  இருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வ
மென்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.

உருவவழிபாடு தவறில்லை; சாதாரண மக்களுக்கு இறைவனோடு மனம் ஒன்ற அது ஏதுவாகிறது;   பலரையும்   நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு  தவறல்ல! என்று ஆத்திகர்கள்   கூறுவர்.

     ஆனால்,    சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்   இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,   உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே. அவமதிப்பதாகும்   என்றும்   கூறுவர்.

     சித்தர்களின்  இந்தக்  கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு  உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து  அதைப்  பல  பெயர்களால்  அழைப்பது  அறிவின்மை;  அறிவற்ற
மூடர்கள்தாம்  இவ்விதம்  செய்வார்கள்.   உலகைப்   படைத்துக்   காத்து,
அழிக்கவும்  வல்ல  ஒரு  பொருள்  கல்லிலா  இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின்  வடிவம்  உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

     பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
     எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
     பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
     ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

     கல்லுருவம்  நம்மால்  செய்து  வைக்கப்பட்டது.  அதைப் பழமையான
பொருள்,  அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள்.  உங்கள் மனதில்  தோன்றும்  பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள்.  உங்களின்  அறியாமை  காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது;  உலகையும்,  உலகப்  பொருள்களையும்  படைக்க  வல்லது. தாம்
படைத்த  பொருளை  அறியாமல்  வைத்திருக்கவும்  காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது.  உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

     இதில்  எங்கும்  நிறைந்த  கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது  தவறு  என்றும், அப்படி  வழிபடுபவர்கள்  அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

     உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?

     “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

     ஊரிலே  வாழும்  பெரிய  மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள  கருத்து  வேற்றுமைகளைக்  களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை  அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை இழுக்கிறீர்கள்.   ஒரு   சிறிய  உருவத்திற்கு  இவ்வளவு  பெரிய   தேரா? நூற்றுக்கணக்கான  மக்கள்  உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி இருப்பது  அறிவுடையமையாகுமா?  இதனால்  எவ்வளவு பொருள் விரயம்? எவ்வளவு நேரம் வீணாகிறதுஎன்கிறார் சிவவாக்கியர்.

    “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”

என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.

     ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன   விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்  கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள் என்கிறார் சிவவாக்கியர்.

     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.

சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
     உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
     கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
     உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே

என்றும்,

     அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
     நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
     அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
     அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று  ஐந்து  கோடி  மந்திரங்களும்  ‘சிவாய நம’  எனும் ஐந்து எழுத்தில்
அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.

     திருமூலரின்  சில  கருத்துக்களையும்   சிவவாக்கியர்  தம்  பாடலில்
எடுத்துரைக்கின்றார்.

     ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’

என்ற திருமூலர் கருத்தினை,

     ‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
     வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
     ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
     காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.

     இறைவனை  கோயில்,  பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது  உள்ளமே  இறைவன்  உறையும்  கோயில்  இந்த  உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.

    ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்'

என்ற திருவள்ளுவரின் கருத்தையும் மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”

என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார் சிவவாக்கியர்.

  எவருக்குமே   புலனாகாத   கடவுள்  அறிவின்  வடிவானவர்.  அவரே
ஆதிசித்தநாதர்,  அவரை  சித்தத்தினால்  மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில்  அவரை  வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம்;  மேள தாளங்களாம்; 
அறிவற்றவர்  செய்யும்   புரளி.  இதனை   அறிவுடைய  மக்களே  ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்  சிவவாக்கியர்.

     ஆனால்   அவரது   கொள்கையைச் சித்தர்கள் ஏற்றுக்கொண்டனர்;  சாதாரண  மக்கள்......?

     சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிப்போரை  எள்ளி  நகையாடி  அதிலிருந்து    கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,

     “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ  
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்போருக்கு
எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்  சிவவாக்கியர்.

வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த  பால் எச்சில், , மதியுமெச்சி
லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)

என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார் சிவவாக்கியர்.

சிவவாக்கியரின் புரட்சியான  சிந்தனையின்   காரணமாக,   இவர்  சைவராயிருந்தும்    இறுதியில்  வைணவக்  கடவுளான
இராமரையும்  தம்  பாடல்களிலே  புகழ்ந்து பாடியதுதுடன்  இராம நாமத்தின்
பெருமையை  மிகச் சிறப்பாக  எடுத்துரைக்கிறார்.

     ராம! ராம!  என்று      உச்சரித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த
பூசையோ,  சந்தி,  ஜெப,  தபங்களோ  செய்ய  வேண்டியதில்லை;   எல்லா
நன்மைகளும், கிடைக்கும்!   என   உறுதியோடு  கூறுகிறார் சிவவாக்கியர்.

வாழ்விற்கு வேண்டிய  எல்லாப்  பலன்களும்  இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும்
என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல்.

     “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
     சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
     சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
     சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் "ராமா"என்ற    தாரக மந்திரத்தின்  பெருமையைக்   கூறுகின்றார்  சிவவாக்கியர்.

     அந்தி,  காலை,  நடுப்பகல்  ஆகிய  மூன்று  வேளைகளும் புண்ணிய
தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்  சிவவாக்கியர்.

    சந்தியாவந்தனம்,  முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள்,
பூஜைகள்    இவற்றால்   கிடைக்கும்  பயனும்,  இராம  நாம   உச்சரிப்பில்
கிடைக்கும்.  உள்ளத்தில்  உருப்பெரும்  அறிவும் இராம நாமத்தால் மிகுந்த
வளர்ச்சியடையும்.    இவ்வாறு   இராம    நாமத்தின்   பெருமையை
எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

     "நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
     தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
     சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
     இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்".

என்ற  கம்பரின்  தனிப்பாடல்  கருத்து  சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து
விளங்குவதைக் காணலாம்.    கடவுள் நம்பிக்கையில்லாத  மிகப்பெயரிய சமூகச் சீர்திருத்தவாதியைப் போல ஆரம்பக்காலத்தில் பேசிவந்த  சிவவாக்கியர்,  அறிவும், ஞானமும்  முதிர்ந்தக் காலத்தில்   சிவபெருமானே  துதிக்கும்"ராமா"  என்ற தாரக  மந்திரமே   உலகோர்  உய்வதற்கு  வழி! என உணர்ந்து  இராம நாமத்தின்  மகிமையைக்  கூறியிருக்கின்றார். 

       ( சிவபெருமான்  துதிக்கும்" ராமா"  என்ற  தாரக  மந்திரத்தையே  திருமால்  தனது  இராமாவதாரத்தில்  தனது பெயராக ஏற்றார்.    இராமரது அவதாரத்திற்கு முன்பே உள்ளது   "ராமா"  என்ற  மந்திரம்.)

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...